×

பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் லாரிகள் சிறைபிடிப்பு

பல்லடம்,மே13:பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையத்தில் எம்.சான்ட், ஜல்லி பாரம் ஏற்றி வந்த கேரளா மாநில பதிவு எண் கொண்ட கன ரக லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சாலைகளின் வழியாக கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுக்கம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் இது பற்றி பாதகையும் கிராம மக்கள் வைத்தனர். இந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற நான்கு கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தத்தின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் லாரிகள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chukkampalayam ,Palladam ,M. Chant ,Kerala ,Dinakaran ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...